நாமக்கல்லில் பரபரப்பு ; இனோவா காரில் வந்து 17 பவுன் நகை திருட்டு
நாமக்கல் நகரில் ஆளில்லா வீட்டை நோட்டமிட்டு பூட்டை உடைத்து 17 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் அடுத்துள்ள இ.பி.காலனியில் வசித்து வருபவர்கள் பாலுசாமி – பூங்கொடி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், ஒருவர் வெளியூரிலும் மற்றொருவர் நாமக்கல்லிலும் பணிபுரிந்து வருகின்றனர். பாலுசாமி சொந்தமாக லாரி ஒன்றை வைத்து தொழில் செய்து வருகிறார். பூங்கொடியும் தையல் கடை வைத்துள்ளார்.
பூட்டை உடைத்து 17 பவுன் நகை திருட்டு :
இந்நிலையில், பாலுசாமி மற்றும் அவரது மகன் பணிக்கு சென்று விட பூங்கொடி தனது வீட்டை பூட்டி விட்டு தையல் கடைக்கு சென்றுள்ளார். இந்நிலையில், மாலை பணி முடிந்து வந்த பூங்கொடியின் மகன், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 17 பவுன் தங்க நகைகள் காணாமல் போனது தெரியவந்தது. இதனையடுத்து சம்பவம் குறித்து நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த நாமக்கல் துணை காவல் கண்காணிப்பாளர் தனராசு தலைமையிலான போலீசார் வீட்டை சுற்றி ஆய்வு செய்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.
இனோவா காரில் வந்து திருட்டா..?
மேலும் அக்கம்பக்கத்தில் விசாரணை மேற்கொண்டதில், இனோவா காரில் வந்த மர்ம நபர்கள், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதே போல அருகில் உள்ள அசோக் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்புறம் மர்ம நபர்கள் சிலர் காரை நிறுத்தி ஆளில்லா வீட்டினை நோட்டமிடுவது போல சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழலில் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த நாமக்கல் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்ட பகலில் பூட்டியிருந்த வீட்டில் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் நாமக்கல் நகர் பகுதியில் உள்ள பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க ; லத்துவாடி குப்பை கிடங்கில் பயங்கர தீ
- நாமக்கல்